Monday, December 19, 2011

வராஹி


வராஹி

இந்த்த நாமத்தை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (ஆம் வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).

வராஹியின் வரலாறு மொத்தமாக சப்த கன்னிகள் வரலாறு என்று பார்த்தால் ,அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் தாம். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும்  ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.


 இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.
இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்.

கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்கிருதா .
இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ,  முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.

வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும்  நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள் }. 


ஆனால் பொதுவாக மஞ்சள் உடையும் , முக்கியமாக கலப்பையும் , உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள் ஆக தண்டம் ஏந்த்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பர்கள். நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சையில் பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.
ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி {அகிலாண்டேஸ்வரி அம்மை} வராஹி ஸ்வரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.

கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை.
சரி இவ்வளவு நேரம் அம்பிகையின் வடிவம் தோற்றம் பற்றி எல்லாம் சொல்லியாயிற்று . நம் விஷயத்துக்கு வருவோம் .. வராஹி உணர்த்தும் தத்துவம் என்ன ?? எதற்கு வராஹி என்று பார்ப்போமா ?
வராஹியை பற்றிய செய்திகளில் ஒன்று முக்கியமானது . வராஹி வராஹரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்ல படுகிறாள். அதில் வராஹ அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராஹியின் தத்துவத்தை உணர்த்தி விடும் .

வராஹம் என்றால் என்ன ? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??
பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில்  {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி}  வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடைய குண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி.

 எப்படி ஒருவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தான் என்று சொன்னால் அவன் நன்றாக படித்தான் என்பது மறைபொருளாய் உள்ளதோ அது போல் குண்டலினி உயர்வால் நம்முடைய வாழ்வு தானாய் உயரும், ஆக வராஹி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். சரி உயருதல் சரி ,  எங்கிருந்து உயரும் ? எங்கே செல்லும் ? என்றால் எப்போதும் முடங்கி கிடக்கும் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி எழுந்து ஆக்கினையை அடையும். அப்படியான ஒரு உந்துதலை தருபவள் வராஹி . ஆக ஆக்ஞாசக்க்ரேஸ்வரீ என்னும் நாமம் அன்னைக்கு பொருத்தம் தானே ?


இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய,  அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
எழுந்த குண்டலினி மேல் வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..
அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,
ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும்  ஆயுதங்களும்.
சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது.


இதனால் தான் வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.
இப்படி வராஹி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.


ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். அவள் காயத்திரியான
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும்  ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுட்வாள். 
 வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவாள்.
அவளே பகிளாமுகி ,தூமாவதி என்று சொல்லுவார்கள் ..
ஆக வராஹி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராஹியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்
வராஹியின் பாதார விந்தங்களே சரண். அம்மையின் நாமமே துணை..

மன்னிக்கவும் நீளமான பதிவாகி விட்டது.
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்



Thursday, December 15, 2011

ஆண்டாள் - கோதை பிராட்டி


கோதை – ஆண்டாள்

மார்கழி என்றாலே ஆண்டாள் திருப்பாவை தான் நினைவுக்கு வரும். அப்படி கண்ணனே சொன்ன “மாதங்களில் நான் மார்கழிஎன்னும் உயரிய மார்கழியின் நாயகியாகவே விளங்குகிறாள் இந்த சூடி கொடுத்த சுடர் கொடி.

திருவில்லிபுத்தூர் – ஆம் சங்கரன்கோவில், ராஜபாளையம் – வழி மதுரை செல்லும் பாதையில் உள்ள ஒரு ஊர் . அப்படி என்ன பெருமை இந்த ஊருக்கு மற்ற எல்லா ஊரை விட என்று கேட்டால், அதற்க்கு பதில்  நிச்சயம் உண்டு! ஆம்  இந்த ஊரில் தான் வாழ்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் மனித தெய்வம், அரங்கனுக்கே மனைவி ஆகி பெருமை சேர்த்த ஊர்.


யத்பாவம் தத்பவதி
என்றும் சொல்லுவார்கள் ..அதாவது நாம் என்னவாக வேண்டும், எது  நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமே, நினைத்துகொண்டே இருக்கிறோமே  அதுவாகவே நாம் ஆகிறோம் .. அதனால் தான் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றும் , மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்று பொய்யா புலவன் சொல்லி இருக்கிறான்.

மெய்ஞானத்தின் கூற்று படியும் நம்மை சுற்றி நம் எண்ண அலைகள் சென்று கொண்டு இருப்பதாகவும் . அதற்கு தாக்கம் அதிகம் என்று சொல்லுவார்கள். நாம் நல்லவை எண்ணி நல்லவற்றை செய்து வந்தோமேயானால் அந்த எண்ணங்களின் வலிமையே நம்மை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாவது ஆகும் .

அது போல கண்ணூறு கழித்தல், இறந்த வீட்டுக்கு சென்று வந்தால் குளிப்பது போலவை எதிர்மறையான எண்ணங்களை {அதன் தாக்கத்தை மாற்ற} என்றும் சொல்லுவார்கள் .

 சரி இந்த கதைகளுக்கும் ஆண்டாளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதே, ஆண்டாள் பெரியாழ்வார் தோட்டத்தில் துளசி மடியில் {மகா லக்குமியின் அவதாரமாகவே , பூமி பிராட்டி மடியில்} அன்றலர்ந்த தாமரை  போன்ற முகத்தோடு கிடைக்க பெற்றவள். அவள் சிறு பிராயம் முதலே பெரியாழ்வார் சொன்ன கண்ணன் லீலை கதைகளை கேட்டு, அந்த கண்ணனையே மணப்பேன் என்று உறுதியாக இருந்தாள். அந்த எண்ணத்தை தன மனதில் வைத்தே வாழ்ந்தும் வந்தாள். ஆண்டாள் சிறு குழந்தை முதலே தன்னுடைய எண்ணத்தில் வலிமை உள்ளவளாக இருந்தாள்.

ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்பார்கள். அது போல கோதை தான் பிறந்த வில்லிபுத்தூரயே பிருந்தாவனமாக பாவித்து, தன்னுடைய தோழிகளயே கோபிகைகளாகவும், அங்குள்ள பொய்கையையே யமுனையாகவும் , வடபத்திரசாயியயே கண்ணனாகவும் {சரி தான் வடபத்ரம் – ஆலிலை சாயி – துயில்பவன் அதாவது ஆலிலையில் துயில்பவன் ஆம் கண்ணன் தானே }
 மார்கழி மாதத்தில் பாவை நோம்பு நோற்று அந்த கண்ணனையே {ரங்கனயே} மணந்தும் காட்டினாள்.



எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
என்பதற்கு மிக சீரிய எடுத்துக்காட்டு ஆண்டாள் தான் . ஆகவே உயர்ந்த எண்ணங்களை எண்ணுதலும், நினைத்த காரியம் நினைத்த உடனே நடக்கவும் ஆண்டாள் வழிபாடு சிறந்தது.

தன்னுடைய தயா உள்ளதை, தாயன்பை , நன்றி நவிலலை ஆண்டாள் தன்னுடைய அர்ச்சை கலைத்து நிரூபித்தும் உள்ளாள்.

அவள் தன்னுடைய நாச்சியார் திருமொழியிலே ஒன்பதாவது பாசுரத்தில் தனக்கு பெருமாளோடு திருமணம் நடந்தால் மதுரை அழகருக்கு நூறு தடா{அண்டா} வெண்ணையும் அக்கார அடிசில்{சர்க்கரைப் பொங்கல் } தருவதாய் வாயால் நேர்ந்து இருந்தாள்.

நாறு நறும்பொழில்மா லிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணைய் வாய் நேர்ந்து பராவிவைத்தேன் ,
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்,
ஏறு திருவுடயோன் இன்று வந்திவை கொள்ளுங்க்கொலோ!


ஆனால் இந்த வேண்டுதல் நடத்துவதற்கு முன்னமே அவள் நாச்சியார் ஆகி விட்டாள். இப்படி இருக்கும் காலத்தே கோதைக்கு பின் வந்த வைணவ மரபின் “திருப்பாவை ஜீயர்“ எம்பெருமானார் ராமானுஜர் கோதையின் பாசுரத்தை படித்து ஐயோ ஆண்டாளின் ஒரு நேர்ச்சை மீதம் உள்ளதே என்று எண்ணி ஆண்டாளுக்காக அவரே அந்த நேர்ச்சையை{பொன் வட்டிலில் நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும்} முடித்து வைத்தார். நேர்ச்சை முடிந்து அவர் திரு வில்லிபுத்தூர் வருங்கால் சூடி கொடுத்த கோதை பிராட்டி தன அர்ச்சை{சிலா வடிவம் } கலைத்து வலது பாதத்தை ஒரு அடி முன் வைத்து வாருங்கள் எம் அண்ணாவே என்று அழைத்தாளாம்.

நன்றி மறப்பது நன்றன்று என்னும் சீரிய வாக்கினிற்க்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி இருக்கிறாள் கோதை பிராட்டி.


ஆக கோதை வழிபாட்டால் சீரிய எண்ணங்களும், சிறப்பான வாழ்வும், எண்ணியவை எண்ணியபடியே நினைத்த நேரத்தில் நிறைவேறவும் செய்யும்.

ஆண்டாள் வில்லிபுத்தூரில் வாழ்ந்த வீடே ஆண்டாள் சன்னிதியாக தனி கோவிலாக விளங்குகிறது. உள்ளே அர்ச்சா ரூபத்தில் ரங்கனும் அந்த ரங்கனயே ஆண்ட ஆண்டாளும் காட்சி தருகிறார்கள்.



            அவளுக்கே உரிய இந்த மார்கழி மாதத்தில் அவளை வணங்கி நம்முடைய எண்ணத்திற்கும் மனதிற்கும் முழு வலிமை கொடுத்து வாழ்வில் வெற்றி பெறுவோமாக.


கோதை நாச்சியாரே சரணம் ! ஆண்டாளின் பாதார விந்தங்களே போற்றி போற்றி !!!
ஆண்டாள் - பக்தி, வைராக்கியம் , அன்பு முதலானவற்றிக்கான தெய்வம். 
அன்னைக்கு வணக்கங்கள்.. ஏதேனும் சொல், பொருள், இலக்கண பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்..
ஆன்மிகம் சம்பந்த பட்ட பதிவு ஆனதால் ஏதேனும் தவறு இருந்தால் வாசிப்பவர்கள் தனி மடலிலோ பின்னூட்டத்திலோ பிழையை சுட்டி காட்ட வேண்டுகிறேன்.....

அடியேன்
சந்தனக் கண்ணன்